சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'படிக்காதவன்' திரைப்படத்தில், அவர் ஓட்டும் லட்சுமி எனும் காரில், யாராவது குடித்து விட்டு ஏறினாலோ அல்லது சாராய பாட்டில்கள் வைத்து இருந்தாலோ ஸ்டார்ட் ஆகாது. அது போல ஜார்க்கண்டில் 3 இன்ஜினியர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டமுடியாதபடி ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

தன்பாத் மாவட்டத்தில் வசித்து வரும் அஜித் யாதவ் தனது நண்பர்கள் மணீஷ் மற்றும் சித்தார்த்துடன் இணைந்து இந்தக் கருவியை கண்டுபிடித்துள்ளார். குடித்து விட்டு வாகனம் ஓட்டும் நபர்களால் ஏற்படும் சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் இந்த கருவியை கண்டுபிடித்ததாக அஜித் யாதவ் கூறுகிறார்.

இந்தக் கருவிக்கு ”மதுவுக்கு எதிரான வாகன பாதுகாப்பு அமைப்பு” எனப் பெயரிட்டுள்ளனர். இந்தக் கருவியை அனைத்து வாகனங்களில் பயன்படுத்தலாம் எனவும்; குடித்துவிட்டு வாகனத்தை ஓட்ட முயன்றாலோ அல்லது இருக்கையில் அமர்ந்துகொண்டு குடித்துக்கொண்டே ஓட்ட முயன்றாலோ வாகனம் தானாக நின்று விடும் என அஜித் யாதவ் கூறினார்.

இந்தக் கருவியை மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், மத்திய அரசு அனுமதி அளித்தால் விரைவில் சந்தைப்படுத்தி விற்பனை செய்ய இருப்பதாகவும் அஜித் யாதவ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 13 ஆண்டுகால கடின உழைப்பு - கணித ஆசிரியர் தயாரித்த சூப்பர் சோலார் கார்!